டைட்டானிக் படத்தின் இயக்குநரின் அடுத்த படம், சுமார் 11 வருடங்கள் இடைவெளி கழித்து.
கதை சுருக்கம்:
கி.பி.2154-ல் கதை நடக்கிறது. சுமார் 4.3 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் பண்டோரா என்ற கிரகத்திற்கு பூமியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறார்கள் மனிதர்கள் (Morons). ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு சுமார் 2,99,792 கி.மீ. அதன்படி, ஒளி ஒரு ஆண்டு பயனிக்கும் தூரம், ஒரு ஒளி ஆண்டு. அங்கு உயிர் வாழ, ஆக்ஸிஜன் முகமுடி வேண்டும். இல்லை ஆள் காலி. இவர்கள் அனைவரும் பூமியில் ராணுவத்தில் இருந்தவர்களும் விஞ்ஞானிகளும். சில வருடங்கள் பயணத்திற்கு பிறகு பண்டோராவை அடைகிறார்கள். அங்கு அவர்களுக்கான வேலை, அங்கிருக்கும் இயற்கை கணிமங்கள் (Unobtanium). அவைகளை பூமிக்கு கொண்டு வருவது. அந்த கிரகத்தில் பூமியை போன்றே பல மிருகங்களும் உள்ளவை. 6 கால் குதிரைகள். ஹிப்பபொட்டாமஸ் போன்ற மெகா சைஸ் ஹிப்பபொட்டாமஸ்கள். பெரிய சைஸ் கழுகுகள் போன்ற பறவைகள் போன்றவை.
பூமியில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கே இறங்கும் மனிதர்கள் அவர்களிடம் உறவாட ஏதுவாக உருவாக்கும், அவர்களை போன்ற உடல்கள் தான் "அவதார்"கள். அவை வெறும் உடம்புகள். ஒரு மெஷினில் படுத்து தூங்க வைத்து கனவு மூலமாக (dream walkers) அங்குள்ள அவதார்கள் இயக்கப்படுகின்றன. கூடு விட்டு கூடு பாய்வது போல. இங்கே தூங்கினால் அங்கே உயிர் பெரும் அந்த அவதார். நம்முடைய கதாநாயகன் ஜேக் (Jake Sully), போரினால் முதுகுத்தண்டு பாதிப்படைந்த, சக்கர நாற்காலியில் பயனிக்கும் ஊணமுற்றவர். அவர் twin அண்ணன் விஞ்ஞானியாக இருந்து இறந்ததால், அவருடைய அவதார் வீனாக போகாமல் இருக்க இவரை பயன்படுத்திக்கொள்கின்றனர்.
அங்கே செல்லும் ஜேக் அந்த அவதார்களிடம் சேர்ந்து, அவர்களின் வாழ்க்கை முறையை கற்றுக் கொண்டு, அவர்களின் நம்பிக்கையை பெற்று அந்த அவதார்களை அந்த கிராமத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் ('வியட்நாம் காலனி' படம் போல). அந்த கிராமம் என்பது ஒரு மெகா சைஸ் மரம். அந்த மரத்திற்கு அடியில் தான் மனிதர்களுக்கு தேவையான அந்த கணிமங்கள் இருக்கிறது.

முதலில் உளவு பார்க்க செல்லும் ஜேக், அவர்களின் வாழ்க்கை முறையில் ஈர்க்கப்பட்டு அவர்களுடனேயே சேர்ந்து கொள்கிறார். ஆனால், அவரின் உண்மையான உடல் மனிதர்களின் இருப்பிடத்தில். அதனால், ராணுவம் தலையிட்டு அவரை தூக்கத்திலிருந்து எழுப்பிவிடுகின்றனர். அங்கே இருக்கும் இன்னும் சில மனிதர்களின் துணையோடு அங்கிருந்து தப்பித்து, அந்த மெஷின்களையும் கொண்டு போய் அந்த அவதார்களுக்காக போரிடுகின்றனர். யார் வென்றார்கள்(!), எப்படி வென்றார்கள் என்பதை... வெண்திரையில் காண்க.
சரி! படம் எப்படி?
இந்த படம் 2-டி மற்றும் 3-டி ஆகிய வடிவங்களில் வெளிவந்துள்ளது. நான் பார்த்தது 2-டி. கண்டிப்பாக 3-டியில் பார்த்துவிட வேண்டும்.
எனக்கு இமெயிலில் பல முறை வால் பேப்பர்கள் வந்துள்ளன. அந்த வால் பேப்பர்களில் பல புதிய வண்ண கலவையுடன் இமெஜினரி கிரகங்கள் (photo-realistic world) போன்ற படங்கள் வந்துள்ளன. அதை நிஜமாகவே திரையில் கொண்டுவந்துள்ளது சிலிர்ப்பூட்டுபவை. படத்தின் உண்மையான ஹீரோ, கிராபிக்ஸ். அந்த தூர தேச...ம்ஹூம்...தூர கிரகம் அத்தனை அழகு. செயற்கை அழகு தான் என்றாலும், அம்புலிமாமா படித்தவர்களும், பொ.செ. படித்தவர்களும் எப்படி அந்த கதைக்குள் ஊடுருவ முடியுமா என்று நினைப்பார்களோ, அப்படி இந்த உலகில் ஊடுருவ வைத்த ஜேம்ஸ் கேமரூன் வெற்றி பெற்றுவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்.
கதையில் ஒன்றும் புதுமையில்லை. திரைக்கதையும் அஃதே. மசாலா படம் தான். ஒத்தைக்கு ஒத்தை ஃபைட்டும் உள்ளது. முதல் பாதியில் சில காட்சிகள் கொட்டாவி விட வைக்கின்றன. ஆனால், இந்த திரைக்கதையை காட்சிப்படுத்திய விதம்...நச்.
எல்லாவற்றையும் விட. இந்த படம் நம்மவர்கள் பார்க்க வேண்டிய ஒன்று. நம் நாட்டில் சொல்லப்படும் இதிகாச கதைகளில் சொல்லப்படும் கதைகளில் வரும் பாத்திரங்கள் போன்று வரும் விலங்குகள், பறவைகள் சிறுவர்கள் ஸ்பெஷல், Great Leonopteryx. எதற்காக அவதார்களுக்கு நீல வண்ணம் கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இந்தியத்தன்மை கொடுக்கவா? தெரியவில்லை. ஜேம்ஸ் காமரூன், இந்த படத்தில் வரும் விஷயங்கள் அனைத்தும் தான் சிறிய வயதிலிருந்து படித்த காமிக்ஸ் கதைகளில் இருந்து வசீகரிக்கப்பட்டதாக கூறுகிறார்.

இந்த படத்தில் என்னை கவர்ந்த அம்சங்கள்...
என்னை பொருத்த அளவில், இந்த நாட்டில் வாழும் மக்களில் உண்மையான வாழ்க்கை முறையில் வாழ்பவர்கள் காடுகளிலும், மலைகளிலும் வாழும் மக்கள். இந்தியாவில் அவர்களை பழங்குடியினர் என்றும் மலைவாழ் மக்கள் என்றும் அழைக்கின்றோம். ஆனால், அவர்களை நாம் காட்டுவாசி என்று மட்டுமே நினைத்து பழக்கப்பட்டு விட்டோம்.
அவர்கள் மரங்களை வணங்குபவர்கள் தான். அவர்கள் விலங்குகளை வணங்குபவர்கள் தான். அவர்கள் நெருப்பை நேசிப்பவர்கள் தான். ஆனால், அவர்கள் மரங்களை வணங்குதல் என்பது இயற்கையை வணங்குதல். அந்த இயற்கையை தெய்வமாக நேசிப்பவர்கள். இயற்கையை நேசிப்பவர்கள் அதை அழிக்க விரும்ப மாட்டார்கள். அவர்களின் வாழ்க்கை முறைகளை அனைவரும் ஏற்றுக் கொண்டால், கோபன்ஹேகன்கள் தேவையே இல்லை. அவர்கள் உணர்வுடம் சம்பந்தப்பட்ட ஒரு மெகா மரத்திற்காக நடக்கும் போர் தான் படம்.
அந்த மக்களின் வாழ்க்கை முறையை ஆதரிக்கும் விதமாக, மேற்கு உலகில் இருந்து வந்துள்ள படம் இது. இது இயற்கையை நேசிக்கும், வணங்கும் மக்களுக்கான படம். ஏனோ இந்த படத்தை வேறு கிரகத்தில் நடப்பதாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.
படத்தில் பல வசனங்கள் வரும். "அவங்க அந்த மரத்தை விட்டு போக மாட்டேங்குறாங்க. அதை போய் கடவுளா வணங்குறாங்க" என்று நக்கலாக பேசும் வசனங்கள், அதை தொடர்ந்த சிரிப்பொலி. "அந்த மரத்தில் இருப்பது அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவாது. ஆனா, அத விட மாட்டேன்னு போர் புரியராங்க", "அங்க பாரு. ஒரு குண்டு போட்டதும் கரப்பான் பூச்சி போல கலஞ்சு ஒடுறாங்க" என்ற எள்ளல். கையில் காப்பி கோப்பையுடன் சினிமா பார்ப்பது போல பார்த்துக் கொண்டு அவர்களை குண்டு போட்டு அழிக்கும் காட்சிகள். இவர்களை நோக்கி நவிக்கள் வீசும் அம்புகளை கண்டு கொள்ளாத மனிதர்களின் அசட்டைகள் போன்றவை.
கடைசியில் அந்த மரங்களை மனிதர்கள் ஒரு சில நிமிடங்களில் அழிக்கப்பட்டாலும், போரில் வெகு சீக்கிரமாக தோற்கடிக்கப்பட்டாலும், அவர்களுக்கு இயற்க்கை உதவும் என்ற கருத்து முக்கியமானது. செடிகளிலும், மலர்களிலும், புல் தரையிலும் இருக்கும் ரேடியம்கள். அதில் நவிக்கள் நடந்து போகும் போது ஏற்படும் சொற்ப வினாடி கால்தடங்கள், கடலில் இருக்கும் ஜெல்லி மீன்களை போன்று வானத்தில் மிதந்து கொண்டிருக்கும் ஜந்துக்கள், தொட்டால் சுருங்கிவிடும் மெகா மலர்கள், பின் தொடப்போகும் முன்னரே சுருங்கும் மலர்கள், நவிக்களின் உணர்வுகளுடன் பேசும் மரங்கள், அந்த மரங்களில் இருக்கும் மூதாதயர்களின் நினைவுகள், அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட பிரத்யேக மொழி, தற்காப்புக்காகவே நவிக்கள் விலங்குகளை கொல்லுதல், இயற்கையை அவர்கள் நேசிக்கும் அதன் ஊடே வாழும் அவர்களின் வாழ்க்கை முறைகள் என்று எனக்கு பிடித்த அம்சங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் நவிக்கள் எப்படி இயற்கையுடன் இணைந்து வாழ்கிறார்கள் என்பதற்கான காட்சிகள். இப்படி பல அம்சங்களை இந்தியத்தன்மையுடன் ஒப்பிட்டு படம் பாருங்கள்.

கண்டிப்பாக இந்த படத்தை எல்லோரும் ரசிப்பார்கள், அதன் டெக்னிக்கல் அம்சங்களுக்காகவே.